மக்களின் தலைவர்கள் வாழ்க...(?)

Share it:
ad
(நவாஸ் சௌபி)

இன்றைய அரசியலில் ஒரு சமூகத் தலைவனாக மக்கள் அங்கீகரிக்ககூடிய ஆகவும் குறைந்தபட்ச தகுதி மஹிந்தவின் பக்கமிருந்து மைத்திரியின் பக்கம் மாறுவதாகும், மைத்திரிக்கு ஆதரவு என்று அறிவிக்கும் தலைவர்களைத் தூக்கிச் சுமக்க இன்று நமது மக்கள் தங்கள் தோல்களைச் செருப்பாக தைத்திருக்கிறார்கள். 

அது தவறுமில்லை ஏனெனில் மக்களுக்காக தங்கள் அமைச்சுப் பதவிகளையும் சொகுசான வாழ்க்கை, வாகனம், பாதுகாப்பு, பந்தா என்று எல்லாவற்றையும் பறிகொடுத்து, சமூகத்திற்காக உயிரை விடவும் தயாராக வருகின்ற இத்தலைவர்களைச் சுமக்காமல் வேறு யாரைச் சுமப்பது? எனவே மக்களே நம்தலைவர்களைத் தரையில் இறங்கவிடாமல் ஒருவர் மாறி ஒருவர் சுமந்துகொள்வோம். மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றிய தலைவர்களுக்கு இதை நாம் செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம். 

இதன்படி நேற்று றிசாத் இன்று ஹக்கீம் இருவரும் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் இணை இல்லாத் தலைவர்கள். இதற்கு முன் இருவரும் மஹிந்தவின் பக்கமிருந்து செய்த அரசியல் பாவங்கள் அனைத்தும் இத்தால் மக்களால் மன்னிக்கப்பட்டு அவர்களுக்கான விமோசனம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களும் அவர்கள் சார்ந்த கட்சிக்காரர்களும் பரிசுத்தமடைந்துள்ளார்கள். 

மக்கள் விரும்புகின்ற முடிவினை இவர்கள் எடுத்துவிட்டார்கள் இதனால் முஸ்லிம் சமூகத்திற்கான  விடிவு கிடைத்துவிட்டது. இதற்காக இத்தலைவர்களைத் தூக்கிவைத்து கொண்டாடுவோம்.  பட்டாசு கொழுத்தி வெற்றிவிழாக் காண்போம். 

இதன்பிறகு பொதுபலசேனாப் பிரச்சினைகளோ, சிங்கள பௌத்த தீவிரவாத கடும்போக்குகளோ நமது முஸ்லிம் சமூகத்தற்கு ஏற்படாது. இந்த தலைவர்களின் மாற்றம் மைத்திரியை வெற்றியடையச் செய்து இலங்கை முஸ்லிம்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பதை இனி நாம் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படித் தப்பித் தவறி ஏதாவது ஒரு பிரச்சினை நடந்தாலும் அதற்காக மக்களால் திட்டுவாங்கவும் ஏச்சுவாங்கவும் இப்போதைக்கு அதாஉல்லாவும் ஹிஸ்புல்லாஹ்வும் இருக்கிறார்கள்தானே. நமது தலைவர்கள் நம்முடன் வந்துவிட்டார்கள் இனி என்ன கவலை நமக்கு?

போராளிகளே புறப்படுங்கள் 
ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான் 
(அல்லாஹு அக்பர்)

அதே அரசியல் 
அதே அரசியல்வாதிகள் 
அதே கோஷம் 
அதே மக்கள் 
நாம் மாற மாட்டோமா? அல்லது மாற முடியாதா?
Share it:

Post A Comment:

0 comments: