நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி 100 நாட்களுக்குள் ஒழிக்கப்படும் என மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதி மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் சிலவேளை அவர் வெற்றிபெற்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால் மிகவும் மகிழ்ச்சியடைய போவது தானே எனவும் அவர் கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜே.வி.பி போன்ற வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்து நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்தால், தானும் அதற்கு ஆதரவு வழங்கியிருக்க முடியும் எனவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அவர் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதால், எந்த வகையிலும் தனது கட்சியின் ஆதரவு அவருக்கு கிடைக்காது என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டுமாயின் மைத்திரிபால சிறிசேன கட்சிக்குள் இருந்து கொண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருக்க வேண்டும்.
அதனை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் அவர் கைகோர்த்து கொண்டதை எந்த விதத்திலும் என்னால் அங்கீகரிக்க முடியாது.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க முயற்சிப்பதை மாத்திரமல்லது அந்த கட்சியின் அரசியல், பொருளாதார கொள்கைகளையும் நான் விரும்பவில்லை.
பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறு எவர் கோரிக்கை விடுத்தாலும் எமது ஜனநாயக இடதுசாரி முன்னணி மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments: