எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம், ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்களை வரவழைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித் தார்.
நான் அரசாங்கத்துக்கு பயப்படவில்லை. நான் ஏன் அரசாங்கத்திற்குப் பயப்படவேண்டும் நான் அரச அதிகாரி, மாறாக அரசாங்கத்தின் அதிகாரியல்ல. இதனை புரிந்துகொள்ளுங்கள். மேலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் நான் விசாரிக்க முடியாது. பொலிஸாரின் செயற்பாட்டை நான் மேற்கொள்ள முடியாது என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கூறினார்.
வடக்குத் தேர்தல் சுயாதீனமாக நடைபெறவில்லை என்று பொதுநலவாய பிரதிநிதிகள் கூறியிருந்தால் நான் நாளையே எனது தேர்தல் ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நடைபெறும். இதன் படி தேர்தலில் 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் செயலகத்தில் நேற்று நடைபெற்று விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்;
ஜனாதிபதி மீண்டும் மக்கள் ஆணையைக் கோரும் நோக்கில் தேர்தலை நடத்துமாறு வர்த்தமாணி அறிவித்தலை 20 ஆம் திகதிவிடுத்தார். 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி சட்டமூலத்தின் பிரகாரம் இம்மாதம் 21 ஆம் திகதி நான் வேட்புமனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தேன்.
வேட்புமனுத்திகதி டிசம்பர் 8 ஆம் திகதியும் தேர்தல் தினம் ஜனவரி 8 ஆம் திகதியுமாக அமைந்துள்ளதால் நான் ஒரு வேட்பாளருக்கு பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன. எனவே அந்த விமர்சனத்திற்கு முதலில் பதிலளிக்கின்றேன். வர்த்தமாணி அறிவித்தல் வெளிவந்த திகதியிலிருந்து 16 தினங்களுக்கு பின்னரும் 21 நாட்களுக்குள்ளும் வேட்புமனுவைக்கோரவேண்டும்.
பாப்பரசரின் வருகை
அந்த வகையில் டிசம்பர் மாதம் 8, 9.10,11 திகதிகளில் வேட்பு மனுக்கோரல்களுக்கான தினங்களாக எமக்கு காணப்பட்டன. எனினும் பாப்பரசரின் வருகைக்கு முன்னர் தேர்தலை நடத்தவேண்டும் என்பதாலும், 28 நாட்களுக்கு குறையாத பிரசாரக்காலத்தை வழங்கவேண்டும் என்பதாலும், வேட்பு மனுவை 11 ஆம் திகதியோ அல்லது 10 ஆம் திகதியோ கோர முடியாத நிலை காணப்பட்டது. அத்துடன் 9 ஆம் திகதி சாதாரண தரப்பரீட்சைகள் ஆரம்பமாகின்றன. எமது தேர்தல் திணைக்களத்திற்கு அருகிலுள்ள பாடசாலையிலும் பரீட்சைகள் நடைபெறும். எனவே டிசம்பர் மாதம் 8 ஆம் திகதியே வேட்பு மனுவுக்கு பொருத்தமாக இருந்தது. இதனையே நான் தீர்மானித்தேன் இதில் எவ்விதமான தலையீடுகளும் இல்லை.
எட்டாம் திகதியை நானே தீர்மானித்தேன்
தேர்தல் திகதியை தீர்மானிக்கும் உரிமை எனக்குள்ளது. அதில் அரசியல்வாதிகளின் அழுத்தம் இல்லை. ஜனாதிபதி தேர்தலை வெ ள்ளிக்கிழமைகளிலோ, ஞாயிற்றுக்கிழமைகளிலோ, போயா தினங்களிலோ நடத்தமாட்டோம். மேலும் பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வருகிறார். அதுமட்டுமல்ல 28 தினங்கள் குறையாமல் பிரசாரத்திற்கு காலம் வழங்கப்படவேண்டும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதியை தேர்தல் நடைபெறும் திகதியாக அறிவித்தோம். இதில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை எனக் கருதுகிறோம். தேர்தல் திகதியல்ல முக்கியம் மாறாக மக்களின் புள்ளடியிடுதே முக்கியம் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம்.
கட்டுப்பணம்
இந்நிலையில் கட்டுப்பணம் செலுத்துவது தொடர்பான பிரச்சினை வந்தது. பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னரே கட்டுப்பணம் செலுத்துவதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். அந்த வகையில் டிசம்பர் மாதம் 5 திகதி கட்டுப்பணம் செலுத்துவது முடிவுக்கு வந்தாலும், 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 11 மணிவரை
அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோர் 50 ஆயிரத்தை செலுத்த வேண்டும். சுயாதீன வேட்பாளர் 75 ஆயிரத்தை செலுத்த வேண்டும். வேட்புமனுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி காலை 9 மணிமுதல் 11 மணிவரை இரண்டு மணித்தியாலங்கள் இடம் பெறும். ஆட்சேபனைகளை 9.30 முதல் 11.30 மணிவரை செய்யலாம்.
வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்தவர்கள்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம் பெயர்ந்தவர்கள் வேறு இடங்களில் வாக்களிப்பதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். குறைநிரப்பு இடாப்பில் பெயர் இருக்கின்றவர்களுக்கு மட்டுமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.
வாக்காளர் அட்டை விநியோகம்
வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படும். அவர்கள் அவற்றை வாக்காளர்களுக்கு விநியோகிப்பார்கள். டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி விசேடதினமாக பிரகடனப்பட்டு வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்.
அடையாள அட்டை கட்டாயம்
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு வழமைபோன்று அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. செல்லுபடியான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இன்றி யாரும் வாக்களிக்க முடியாது. தேசிய அடையாள அட்டை செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், வயது வந்தோருக்கா அடையாள அட்டை, அரச ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை, என்பன ஏற்றுக்கொள்ளப்படும். 10 இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை என்ற ஒரு தகவல் உள்ளது. ஆனால் இந்த 10இலட்சம் பேரில் நாம் மேற்கூறிய ஏனைய அடையாள அட்டை உள்ளவர்கள் இருப்பார்கள். எனவே இதில் நான்கு இலட்சம் பேருக்கு அடையாள அட்டை இல்லாமல் இருககலாம் என கருதுகிறோம்.
தற்காலிக அடையாள அட்டை
இவர்களில் கடந்த 2012,2013 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் தேர்தல் திணைக்களத்தின் தற்காலிக அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டவர்கள் அந்த அடையாள அட்டையை ஜனாதிபதி தேர்தலுக்காக பயன்படுத்தலாம். மேலும் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு விரைவாக அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து நடமாடி சேவைகளை நடத்தவுள்ளோம். இதன் மூலம் 2 இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்க முடியும் என நம்புகின்றோம். இவை ஒன்றுமே இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தில் தற்காலிக அடையாள அட்டையை பெறலாம். இதற்கு டிசம்பர் 31 க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். கிராம சேவகரின் அத்தாட்சியைக் கொண்டு வாக்களிக்க முடியாது. தற்காலிக அடையாள அட்டையை பெற கிராம சேவகர் ஊடாக விண்ணப்பிக்கவும்.
பொலிஸ் அதிகாரிகள்
பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் காலத்தில் எனக்குக் கீழ் வரப்போவதாக செய்திகள் வந்துள்ளன. அவ்வாறு ஒன்றும் இல்லை. ஆனால் முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான பொலிஸ் அதிகாரிகளை நாங்கள் கேட்டுள்ளோம். அதுமட்டுமல்ல தேர்தல் செயலகத்தில் முறைப்பாடுகளை விசாரிக்கும் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் சேவையாற்றுவதற்காக பிரதி பொலிஸ் மா தலைமையில்பொலிஸ் அதிகாரிகளை கோரியுள்ளோம். மாவட்ட மட்டத்திலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
தேர்தலுக்கான உள்நாட்டு வெ ளிநாட்டு கண்காணிப்பு தொடர்பில் பேசப்படுகின்றது. தேர்தலில் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டுமென எதிர்க்கட்சிகளும் கோரியுள்ளன. நாட்டில் 1988 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முதல் தேசிய மட்டத் தேர்தல்களில் வெளிநாடடு கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இம்முறை கட்சிகளின் கோரிக்கை மற்றும் கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கு அமைவாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம், ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்களை வரவழைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
உள்நாட்டு கண்காணிப்பாளர்கள்
அத்துடன் உள்நாட்டிலும் பல அமைப்புக்களுக்கு தேர்தலை கண்காணிக்க அனுமதி வழங்கியுள்ளோம். எக்காரணம் கொண்டும் தேர்தலை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்களை வரவழைக்கும் எண்ணம் இல்லை. ஆசிய தேர்தல் அதிகாரிகள் சங்கம், தெற்காசிய தேர்தல் முகாமைத்துவ ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து அதிகமான கண்காணிப்பாளர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்.
கேள்வி:- பிரசாரத்திற்கு ஏன் குறைவான காலம் வழங்கப்பட்டுள்ளது.
பதில்:- அவ்வாறு இல்லை தேர்தல் சட்டத்திற்கு அமைவாக போதுமான காலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒரு தேர்தலில் 33 நாட்கள் வழங்கப்பட்டன. இம்முறை 31 நாட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி:- தேர்தல் திகதியை தீர்மானிப்பதில் அழுத்தம் இருந்ததா?
பதில்:- எந்த அழுத்தமும் இல்லை. அவற்றை நானே தீர்மானித்தேன்.
கேள்வி:- அரசாங்கம் ஏற்கனவே பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது. எனவே தற்போது குறைவான பிரசார காலத்தை வழங்கினால் அது பொதுவேட்பாளருக்கு அநீதி இல்லையா
பதில்:- அவ்வாறு பொது வேட்பாளர் குறித்து நாம் சிந்திக்க முடியாது. எனது சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுவருகின்றேன்
கேள்வி:- தற்போது பல இடங்களிலும் மஹிந்தராஜபக்ஷவின் சுவரொட்டிகள் காணப்படுகின்றனவே?
பதில்:- வேட்புமனு கோரப்படும் வரை சுவரொட்டிகள் குறித்து நான் எதுவும் செய்ய முடியாது. அது அதிகாரிகளின் பணியாகும்.
2014 இடாப்பின் படி தேர்தல்
கேள்வி:- எந்த ஆண்டின் வாக்காளர் இடாப்பின் படி தேர்தல் நடத்தப்படும். வாக்காளர் எண்ணிக்கை என்ன?
பதில் : 2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் .படி தேர்தல்கள் நடைபெறும். இதன் படி தேர்தலில் 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர். குறைநிரப்புப் பட்டியலில் 316 பேரின் பெயர்களே உள்ளன. கம்பஹா மாவட்டத்திலேயே அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 1637537 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி காணப்படுகின்றது. இங்கு 253058 பேர் உள்ளனர். வன்னி தேர்தல் மாவட்டமானது முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.
வடக்குத் தேர்தல் சுயாதீனமானது
கேள்வி:- வடக்கு தேர்தல் சுயாதீனமாக நடைபெறமாக இல்லை என பொதுநலவாய அமைப்பு கூறியுள்ளதே?
பதில்:- அந்தக் கூற்றை நான் மறுக்கிறேன். அவர்கள் அவ்வாறு கூறவில்லை. வடக்குத் தேர்தல் சுயாதீனமாக நடைபெறவில்லை என்று பொதுநலவாய பிரதிநிதிகள் கூறியிருந்தால் நான் நாளையே எனது தேர்தல் ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்வேன். உங்களினால் காட்ட முடியுமானால் அதனை நான் செய்வேன். அவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவிததுவிட்டு சென்றனர்.
கேள்வி:- இலங்கையில் தேர்தல் திணைக்களம் சுயாதீனமாக இல்லை என்று பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஸ்சர்மா கூறியுள்ளாரே,
பதில்:- அவர் என்னிடம் அவ்வாறு கூறவில்லை. தேர்தல் ஆணைக்குழு இருந்தால் நல்லது தானே என்று என்னிடம் கேட்டார் நான் ஆம் என்றேன். அவ்வளவுதான்.
சுய ஒழுக்கம் தேவை
கேள்வி:- சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் தேர்தல் பிரசாரம் இடம் பெறுவது பரீட்சைக்கு இடையூறாக அமையாதா?
பதில் : வாக்காளர்களின் பிள்ளைகளே பரீட்சை எழுதுகின்றனர். எனவே அவர்களுக்கு தடை ஏற்படாமல் செயற்படுவது அனைவரதும் கடமையாகும். சுய ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடிக்கவேண்டும். பரீட்சை நடைபெறும் மண்டபத்திற்கு அருகில் ஊர்வலம் செல்வது முறையல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். இதற்கு எதிராக தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களும் தனித்து ஒன்றும் செய்ய முடியாது.
விரக்தி இல்லை
கேள்வி:- நீங்கள் விரக்தியுடன் உள்ளீர்களா?
பதில்:- நான் விரக்தியுடன் இல்லை. எனது அதிகாரித்திற்கு உட்பட்டு செயற்பட்டு வருகின்றேன். வேட்பு மனு கூறுவதற்கு முன்னர் என்னால் பதாகைகளை அகற்ற முடியாது. அது அதிகாரிகளின் கடமையாகும்.
கேள்வி:- வடக்குத் தேர்தலின்போது பெண் வேட்பாளர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நீங்கள் என்ன செய்தீர்கள்.
பதில்:- அது பொலிஸாருக்கான கடமை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் நான் விசாரிக்க முடியாது. பொலிஸாரின் செயற்பாட்டை நான் மேற்கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் முறைப்பாடு செய்யவேண்டும்.
அரசாங்கம் கூறியதா?
கேள்வி:- பாப்பரசரின் விஜயத்திற்காக தேர்தல் திகதியை இவ்வாறு நிர்ணயிக்குமாறு அரசாங்கம் கூறியதா?
பதில்:- இல்லை பாப்பரசரின் வருகைக்காக நாங்கள் இந்த முடிவு எடுத்தோம். அவர்களின் வருகையை தேர்தல் தடுத்துவிடக் கூடாது.
கேள்வி:- எமது தேசிய முன்னணி, (அபே ஜாதிக பெரமுன) கட்சியின் சின்னத்தை மாற்றுமாறு கோரப்பட்டதா?
பதில்:- இதுவரை கோரப்படவில்லை.
நான் ஏன் பயப்படவேண்டும்
கேள்வி:- நீங்கள் அரசாங்கத்திற்கு பயமா?
பதில்:- நான் ஏன் அரசாங்கத்திற்குப் பயப்படவேண்டும். நான் அரச அதிகாரி, மாறாக அரசாங்கத்தின் அதிகாரியல்ல. இதனை புரிந்துகொள்ளுங்கள்,
மக்கள் வாக்களித்தால் முடிவுகளை அறிவிப்பேன்
கேள்வி:-ஆனால் உங்களை ஜனாதிபதிதானே நியமித்தார்.
பதில்:- தேர்தல் ஆணையாளர்களை ஜனாதிபதிதான் நியமிக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் வேறு அரசு வேறு. நான் அரச அதிகாரி, வடக்குத் தேர்தல் சுயாதீனமாக நடைபெற்றிருக்காவிட்டால் எவ்வாறு எதிர்க்கட்சி 80 வீத வாக்குக்களைப் பெற்றது. ஆணையாளர் என்ற ரீதியில் நான் செயற்படுகின்றேன். மக்கள் வாக்களித்தால் முடிவுகளை அறிவிக்க நான் தயார். விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன். ஆனால் அவை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும். 8 ஆம் திகதி தேர்தல் என்பதை நானே தீர்மானித்தேன்.
மாற்ற முடியாது
கேள்வி:- தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகளை மாற்ற முடியுமா?
பதில்:- எனது அனுமதியின்றி மாற்றமுடியாது. பொலிஸாரின் இடமாற்றத்தையும் நிறுத்தியுள்ளேன். ஆனால் அத்தியாவசியத் தேவை இருப்பின் எனது அனுமதியைப் பெற்று மாற்றம் செய்யலாம்.
வெளிநாட்டு இலங்கையர்கள்
கேள்வி- . வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வாக்களிக்க வழியே இல்லையா?
பதில்:- அவர்களுக்கு வாக்களிக்க வழிசெய்யவேண்டுமென்பதை கொள்கை ரீதியில் நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்கான திட்டத்தை பாராளுமன்றமே முன்வைக்கவேண்டும்.
Post A Comment:
0 comments: