ஆண்கள் பற்றிய புதிய ஸ்பெஷல்..!

Share it:
ad
ஆண்களின் ஆயுட்காலம், பெண்களை விட 7 வருடங்கள் குறைவு.
ஆண்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் பெண்களை விட 4 மடங்கு அதிகம்.
உடல்நலக் கோளாறுகளுக்காக மருத்துவரை நாடும் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களைவிட 3 மடங்கு குறைவு.
புற்றுநோய்க்குப் பலியாவதில் ஆண்களின் பங்கு 2 மடங்கு அதிகம்.
விபத்துகளில் உயிரிழப்பதிலும் ஆண்களுக்கே முதலிடம்.

இன்னும் இப்படி அதிர வைக்கிற ஆண் டேட்டாக்களை அடுக்குகிறார் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ். சர்வதேச ஆண்கள் தினத்தை (நவம்பர் 19) ஒட்டி, உலகிலேயே ஆண்களுக்கான முதல் பிரத்யேக மருத்துவமனையை திறந்திருக்கிற காமராஜ், அதன் அவசியம் குறித்துச் சொல்கிற தகவல்கள், ஒவ்வொரு ஆணுக்குமானது!

‘‘பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் தங்களோட வாழ்நாள்ல பலமுறை மருத்துவர்களை சந்திக்கிறாங்க. ஆனா, ஆண்கள் அவசியம் ஏற்பட்டால் கூட, நேரமும் பணமும் வேஸ்ட்டுங்கிற மனப்பான்மையில, தங்களோட ஆரோக்கியத்தை அலட்சியம் பண்றாங்க. இந்த அலட்சியம் தொடர்கிற போதுதான், திடீர்னு ஒருநாள் யாருமே எதிர்பார்க்காத நேரத்துல அவங்க இறந்து போறாங்க. பொருளாதாரம் உள்பட, பல விஷயங்களுக்கும் ஆண்களை நம்பியிருக்கிற இந்தியச் சமூகத்துல, ஒரு ஆணோட இறப்புங்கிறது அவனைச் சார்ந்திருக்கிற பெண்களுக்கும் குடும்பத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்கள் தங்களோட ஆரோக்கியத்துல அக்கறை காட்டினா, அவங்களோட இறப்பு விகிதத்தை 80 சதவிகிதம் குறைக்கலாம்.

மார்பகப் புற்றுநோய் இருக்கானு சோதிக்கிற மார்பக சுய பரிசோதனையை பெண்களுக்கு வலியுறுத்தறோம். ஆண்களுக்கு ஏற்படற விதைப்பை புற்றுநோய்க்கும் அப்படியொரு சுய பரிசோதனை அவசியம். 15 வயசுலேருந்தே இதை ஆண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். 20 - 30 வயசுல விதைப்பை புற்றுநோய் தாக்கிற அபாயம் அதிகம். 30 பிளஸ்லயே ஆண்களுக்கு இன்னிக்கு நீரிழிவு வருது. பெற்றோருக்கு நீரிழிவு இருந்தா, பிள்ளைகள், இளவயசுலேருந்தே வாழ்க்கை முறையை மாத்திக்கப் பழகணும். முறையான உணவு, உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மூலமா நீரிழிவை 10 வருஷங்களுக்குத் தள்ளிப் போடலாம். சிறுநீரகங்கள் செயலிழந்து போறதைத் தவிர்க்கலாம்.

40-50 வயசுல பிராஸ்டேட் சுரப்பியில உண்டாகிற புற்றுநோய், தைராய்டு புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அபாயம் அதிகம். கண்களோட வெளித்திரை சுருங்கி விரிவதில் பிரச்னை, கேட்டராக்ட்னு பலதும் 45 வயசுக்குப் பிறகுதான் தொடங்கும். 40 வயசுக்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து ரத்தக்குழாய்கள்ல கொழுப்பு படிஞ்சிருக்கானு பார்க்கணும். இந்த வயசுல பலருக்கு ஆண்மைக்குறைவு வரும். அதை வயசானதோட அறிகுறியா அலட்சியப்படுத்தக் கூடாது. ஆண்மைக்குறைவால பாதிக்கப்படறவங்களுக்கு, அடுத்த ஒன்றரை வருஷத்துல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் மிக அதிகம். 

60 வயசுல ரத்த அழுத்தம், தைராய்டு, புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்ளணும். 70 பிளஸ்ல உள்ள ஆண்களுக்கு எலும்புகள் பலவீனமாகி, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கலாம். சுலபமா கீழே விழுந்து, அடிபட்டு, எலும்புகள் முறிஞ்சு போய், படுத்த படுக்கையாகலாம். இதைத் தவிர்க்க அவங்க தங்களை எப்போதும் சுறுசுறுப்பா வச்சுக்கணும். உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. பாத்ரூம் மற்றும் டாய்லெட்டை ஈரமில்லாம, வழுக்காத தரையுடன் கூடியதா மாத்தணும். அந்த வயசுல துணையை இழக்கறது, பிள்ளைகளோட உதாசீனம், பொருளாதார நலிவுனு பல காரணங்களால மனரீதியா ரொம்பவே உடைஞ்சு போயிடுவாங்க. அதுலேருந்து அவங்களை மீட்டெடுக்க, கவுன்சலிங்கும், ஆதரவு சிகிச்சையும் அவசியம்.

நம்மளோட மரபணுவுல உள்ள டெலோமேர் (telomere) கொஞ்சம் கொஞ்சமா குறையற போதுதான் வயோதிகம் தாக்குது. நோய்கள் வந்து, இறப்பு நெருங்குது. சிகரெட், குடி மாதிரியான பழக்கங்களைத் தவிர்த்து, சரியான உணவு, முறையான உடற்பயிற்சி, கூடவே இந்த டெலோமேரை அதிகப்படுத்தற ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக்கிட்டா, ஒவ்வொருத்தரும் 100 வயசு வரை வாழலாம். அதுவும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வாழ முடியும்னு ஒவ்வொரு ஆணுக்கும் நிரூபிக்கிற முயற்சிதான் இந்த பிரத்யேக மருத்துவமனை...’’

ஒரு நாளைக்கு 1,440 நிமிடங்கள் உள்ளன. அதில் வெறும் 30 நிமிடங்களை உடற்பயிற்சிக்கு ஒதுக்குவதால் உண்டாகும் பலன்கள் தெரியுமா?

மாரடைப்பு அபாயம் குறையும். மூளையில் ஏற்படுகிற பக்கவாதம் தவிர்க்கப்படும். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகள் வெகுவாகக் குறையும். எலும்புகள் உறுதியாகும். இல்லற வாழ்வில் ஆரோக்கியம் நீடிக்கும். மன அழுத்தம் குறையும்.
Share it:

Post A Comment:

0 comments: