மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஊடாக இலங்கைக்கு எதிரான சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதோடு கோடிக்கணக்கான பணமும் பொது எதிரணிக்கு வந்து சேர்கிறது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இவ் அணி வெற்றி பெற்றால் அது சிங்கள பௌத்தர்களுக்கு சாவுமணியாக அமையும் என எச்சரிக்கை விடுக்கும் பொதுபல சேனா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இலங்கையிலும் தலைதூக்கலாம். எனவே உளவுப் பிரிவினர் உஷாராக இருக்க வேண்டுமென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது.
கொழும்பு கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
சந்திரிகாவின் 'ஈ' திட்டத்தின் கீழ் சர்வதேசம் மற்றும் தேசிய சதிகாரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டு நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொது எதிரணியை சுற்றி முஸ்லிம், கிறிஸ்தவ அடிப்படைவாதச் சக்திகளே உள்ளன.புத்தர் மனித மாமிசம் உட்கொண்டார் என பிரசாரம் செய்த தௌஹீத் ஜமாத் அமைப்பு உட்பட முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களும் கிறிஸ்தவ அடிப்படைவாத அமைப்புக்களுமே பொது எதிரணிக்கு ஆதரவு வழங்குகின்றன.
இது மிகவும் பயங்கரமானது இவ் அணி வெற்றி பெற்றால் சிங்கள பௌத்தர்களுக்கு அதுவே சாவுமணியாக அமையும்.அது மட்டுமல்லாது பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால கூறுகின்றார் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படுமென்று.
மறுபுறம் ரணில் சொல்கிறார் ஜே.ஆரின் அரசியலமைப்பு முழுமையாக ஒழிக்கப்படமாட்டாது. திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்கிறார்.இவ் அணியில் ஒரே கொள்கையுடைய தலைவர் இல்லை. பலரும் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளனர்.
இவர்களால் எப்படி நாட்டுக்கு தலைமைத்துவத்தை வழங்க முடியும்.இந்த ஜனாதிபதி தேர்தல் நாட்டுக்கு தீர்க்கமானது. சர்வதேச, உள்நாட்டு சதிகாரர்களால் நாடு சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் ஊடாகவே இச்சக்தி முன்னெடுக்கப்படுவதோடு அந்நாடுகள் ஊடாக பல கோடி ரூபாய் இவ் அணிக்கு வந்து சேர்கின்றது.இந்தியாவிலும் உலகிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். முஸ்லிம் பயங்கரவாதம் வியாபித்துக் கொண்டு வருகின்றது. இலங்கையின் கிழக்கில் முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்கள் தலைதூக்கி வருவதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. யும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில் செய்யாமல் கஷ்டப்படாமல் பணம் உழைக்கக் கூடியதுதான் பயங்கரவாதம். எனவே எமது உளவுப் பிரிவினர் உஷாராக இருக்க வேண்டும்.
பணம் கொடுத்து எதனையும் செய்யும் நிலைமை நாட்டுக்குள் தலை தூக்கியுள்ளது.கடந்த காலங்களில் இங்கு வந்த வெளிநாட்டவர்கள் பணம் கொடுத்து தேசிய அடையாள அட்டை கடவுச் சீட்டுக்களை பெற்றனர்.
இது தொடர்பில் நாங்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்து அதற்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் ஏன் இங்கு வந்து இவற்றை பெற வேண்டும். எதற்காக என்பது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை நினைத்து வாக்களியுங்கள் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபல சேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்ததேரர், நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகேயும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments: