நாட்டில் நிலவி வரும் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா மீதும் என் மீதும் புலி முத்திரை குத்தப்படுகின்றது.
இது தொடர்பில் ஒரே விடயத்தை மட்டுமே நான் கூற விரும்புகின்றேன்.
கண்ணாடி வீடுகளிலிருந்து கொண்டு கல் எறிய வேண்டாம்.
இந்த அரசாங்கம் வீதிகளை அமைக்க அதிகம் விரும்புகின்றது. ஏனெனில் நாங்கள் வீதி அமைக்க செலவிட்ட பணத்தை விடவும் இந்த அரசாங்கம் 18 மடங்கு அதிகளவில் செலவிடுகின்றது.
புதிய அரசாங்கம் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்கும். மோசடிகள் மூலம் விரயமாகும் பணத்தை சேமித்து நாட்டுக்கு பாரியளவில் நன்மைகளை செய்ய முடியும்.
ராஜபக்ச குடும்பத்தினர் அவர்களது உறவினர்களுக்கு இந்த நாடு சொர்க்க பூமியாகவே காணப்படுகின்றது. எனினும், இவர்களின் திருட்டுக்களை நிறுத்தினால் முழு இலங்கையையும் சொர்க்கபூமியாக மாற்ற முடியும்.
தெற்கு அதிவேக பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதை என்பன எனது அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் வெட்கமின்றி தங்களது பெயர்களைப பொறித்து இடத்திற்கு இடம் கட்அவுட்களை வைத்துக் கொண்டுள்ளது.
போரை வென்றெடுத்த காரணத்திற்காக காலத்திற்கும் ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது.
முதலில் மஹிந்த ராஜபக்ச பின்னர் அவரது சகோதரர்கள் பின்னர் ராஜபக்சவின் மூன்று பிள்ளைகள் இவ்வாறு ஆட்சி செய்தால் 200 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும்.
பதவிகளை எதிர்பார்த்து நான் இந்த தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை.
கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments: