11 இலட்சம் பாதிப்பு, உயிரிழப்பு 30 ஆக உயர்வு, கிழக்கு மாகாணமே கூடுதல் பாதிப்பு

Share it:
ad
இலங்கையின் கிழக்கு கரையோரத்தை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவிய தாழமுக்கம் வடக்கு நோக்கி இலங்கைத் தீவைவிட்டு நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் எதிர்வரும் சில நாட்களில் காலநிலை சீரடையும் என்றும், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் அவ்வப்போது மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. எனினும், நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டமையால் தொடர்ந்தும் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்த மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 13 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3 இலட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 17 ஆயிரம் பேர் 627 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மண்சரிவுகளில் சிக்குண்டு மற்றும் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 30 ஆக அதிகரித்துள்ளது. 20 பேர் காயமடைந்திருப்பதுடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. சுமார் 4,800 வீடுகள் முற்றாக சேதமடைந்திருப்பதுடன், சுமார் 16 ஆயிரம் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணமே கூடுதல் பாதிப்பு

வெள்ளப் பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 98 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இங்கு பாதிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களில் சுமார் 9 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு 4,122 வீடுகள் முழுமையாகவும், 8,378 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் 79 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 90 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வெள்ளம் மற்றும் மலையக பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட் டுள்ளது. வீதிகளின் ஊடான போக்குவரத்துக்கள் தடைப்பட்டதுடன், வீதிகளைவிட்டு விலகிய பல வாகனங்கள் வெள்ளத்தில் வீழ்ந்து விபத்துக் குள்ளாகியுள்ளன.

வீதிகள் மற்றும் பாலங்கள் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டுள்ளன.
Share it:

Post A Comment:

0 comments: