முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் அமர்த்தும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டார். கட்சியின் யாப்பு விதிகளில் மாற்றம் செய்து மீளவும் சந்திரிக்காவை தலைமைப் பதவியில் அமர்த்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை சந்திரிக்காவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது சுதந்திரக் கட்சி தலைமைப் பதவி குறித்து பேசப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பிலான சட்டத் திருத்தங்களை ஜனாதிபதி சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2
எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரசாரங்களில் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் 100 வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அதிக அக்கறை கொண்டுள்ள அவர், பொதுத்தேர்தலின் போதும் தேசிய அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் போது தமது வெற்றிக்காக உழைத்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றின் நோக்கங்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறு தமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று மைத்திரிபால கருதுகிறார்.
இந்தநிலையில் பொதுத்தேர்தல் பிரசாரங்களின் போது தாம் கட்சிக்காக தனிப்பட்ட ரீதியில் செயற்பட்டால் அது கட்சிகளுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் என்று அவர் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments: