மஹிந்தவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும், மைத்திரியினால் எப்படி வெற்றி பெற முடியும் - அதாஉல்லா

Share it:
ad
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சரத்பொன்சேகா பலிக்கடா ஆக்கப்பட்டது போல் இம்முறை மைத்திரிபால சிறிசேன பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். அன்று சரத் பொன்சேகாவிற்கு நடந்த கதியே இம்முறை மைத்திரிபால சிறிசேனவிற்கும் நடக்கவுள்ளது என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

2015 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட பெரும்போக நெல் விவசாயிகளுக்கு விதை நெல்லுக்கான மானியம் வழங்கும் நிகழ்வு நேற்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கின்ற வேளையில் ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்துகிறார் என்றால் அது தோற்பதற்காக அல்ல. அவர் நிச்சயம் வெற்றி பெறுவார். இந்த நாட்டில் உள்ள சிங்கள மக்களில் 75சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் அவருக்கு வாக்களிக்கவுள்ளனர். சிறுபான்மை மக்கள் அவருக்கு வாக்களித்தாலும் வாக்களிக்கா விட்டாலும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவார். 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷவைத் தெரியாமல் சிங்கள மக்கள் வாக்களித்து வெற்றி பெறச்செய்திருந்தார்கள். 2010 ஆம் ஆண்டு அவரது திறமைகளைக் கண்ட மக்கள் 18 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெறச் செய்தார்கள். அப்போது கூட சிறுபான்மைச் சமூகம் அவருக்கு வாக்களிக்கவில்லை. எது எப்படி அமைந்தாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு வெற்றி பெறுவதென்பது உறுதி செய்யப்பட்ட செய்தியாகும்.

காலத்திற்குக் காலம் கட்சிக்குள் இருக்கும் சிலர் வெளியில் வந்து வேட்பாளர்களான வரலாறுகள் இருக்கின்றன. அவர்கள் வென்றதற்கான தடயங்கள் இல்லை. பல்வேறான அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு அடியேனும் அரசியல் விடயங்களை நகர்த்தி விட முடியாமல் இருக்கும் போது மைத்திரிபாலவினால் எப்படி வெற்றி பெற முடியும்? ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களால் காலத்திற்கு காலம் தமிழ் முஸ்லிம் மக்களை ஏமாற்றிப் பிழைத்ததனால் அவர்களால் எழும்ப முடியாமல் போனது. மைத்திரிபால சிறிசேனவை இன்னும் கிராமப்புற மக்களுக்கு தெரியாது. அவர் இன்னும் கிராமப் புறங்களில் கூட்டங்கள் நடத்தவில்லை. களத்தில் இறங்காமலே வெறுமனே ஊடகங்களில் மாத்திரம் அறிக்கைகளை விட்டு மாயையை உருவாக்குகின்றார்கள். எமது நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமைப்பட்டு பேசித் தீர்ப்பதற்கான ஓர் தலைமைதான் மஹிந்த ராஜபக் ஷ அவரது வெற்றி மூலம் பல்வேறான பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்படவுள்ளது. ஆகையால் அவருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

எமது தேசிய காங்கிரஸ் கட்சி வெறுமனே அறிக்கைகள் விடுகின்ற கட்சியல்ல. எமது மக்களுக்கும் எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் சிந்தித்து செயற்படுகின்ற கட்சியாகும். அதனால்தான் வடக்கிலிருந்து கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது. அதன் பிரகாரம் தற்போது கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு எம்மை நாமே ஆளக் கூடிய நிலைமை கிட்டியுள்ளது மட்டுமல்லாது அனைத்து இன மக்களும் இம்மாகாணத்தில் ஒற்றுமையோடு வாழ்ந்து வருகின்றார்கள்.

கிழக்கு மாகாண சபையினை எடுத்துக்கொண்டால் இச் சபையில் மூவினங்களையும் பிரதிபலிக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள். இதனால் இம்மாகாணத்திலுள்ள தமிழ் சிங்கள முஸ்லிம்கள் சமமாக இருந்து தமக்கான பிரச்சினைகளைத் தீர்க்க கூடிதாக உள்ளது. இதற்கு வழியேற்படுத்தித் தந்த எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இம்மாகாண மக்கள் விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

2005 ஆம் ஆண்டு முழுத் தமிழர்களும் முழு முஸ்லிம்களும் மலையக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என ஒரு சாரார் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் எமது தேசிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவளித்து எமது கிழக்கு மாகாணம் வடக்கிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு மூவின சமூகங்களும் நிம்மதியாக வாழ வேண்டும். எமது நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டு மக்கள் சுதந்திரமாக நடமாட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாம் செயற்பட்டோம். அன்று நாம் எதிர்பார்த்ததுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் வெற்றி பெற்று நாம் கோரியிருந்த கோரிக்கைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டன. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஒரு இலட்சத்திற்கும் அதிகமான சொற்ப வாக்குகளினால் வெற்றி பெற்ற போதிலும் அதன் பின்னாட்களில் அவர் அளித்த வாக்குறுதிகள் மக்களுக்கு நிறைவேற்றப்பட்டதனால் நாட்டு மக்கள் அவர் பக்கம் சென்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சமாதானம் நிலை நாட்டப்பட்டதனால் நாம் ஜன்னலைத் திறந்து வைத்து நிம்மதியாக நித்திரை செய்யக் கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. வேண்டிய இடத்திற்கு சென்று வரக்கூடியதாகவும் சுதந்திரமாக கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பும் ஏற்பட்டிருக்கின்றது. யுத்த காலத்தில் யாருமே தமது கருத்துக்களைப் பேச முடியாது. அப்போது ஆயுதங்கள்தான் பேசின. அரசியல் தலைமைகள் அப்போது பேசியபோது வேட்டுக்களால் உயிர் வேட்டையாடப்பட்டு வந்தன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளை எடுத்து நோக்குகின்றபோது ஏனைய தலைவர்கள் செய்தவைகளை விட மக்களுக்கு அதிகளவிலான நன்மைகளைச் செய்துள்ளார். அதனால் நாட்டு மக்கள் அவர் பக்கம் நிற்க வேண்டியது காலத்தின் தேவையாகும். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த மட்டில் இங்குள்ள மக்கள் பிழையான முறையில் வழி நடத்தப்பட்டு வந்தார்கள். அவர்கள் அளிக்கின்ற வாக்குகளால் எதனையும் செய்ய முடியாமல் போனது. ஆனால் தேசிய காங்கிரஸ் கட்சி மாத்திரம் அளிக்கின்ற வாக்குகளால் வெற்றியினை பெற்றுக்கொள்ளக்கூடிய இயக்கமாக இருந்து வந்தது.

எமது முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் அரசிற்கு எதிராக நினறு செயற்பட்டு மக்களைப் பிழையாக வழிநடத்தி வந்தமையால்தான் எமது முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சில அமைப்புக்கள் எமது சமூகத்தை எதிர்த்து நின்று செயற்படுகின்றன என்றார்.
Share it:

Post A Comment:

0 comments: