கத்தாரில் கிரிக்கெட் விளையாடிய இந்தியர், திருமண நாளில் பலி

Share it:
ad
கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில் கிரிக்கெட் விளையாட்டின் போது இந்தியர் ஒருவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரமோத் தெராயில்(32). தோஹா அருகேயுள்ள மதினத் கலிபா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். திருமணமான இவருக்கு இந்த ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. 

இரு மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் கேரளாவுக்கு சென்றிருந்த பிரமோத் தெராயில் சமீபத்தில்தான் தோஹாவுக்கு திரும்பினார். மதினத் கலிபா பகுதியில் நேற்று 13-12-2014 தனது நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 

விளையாட்டின் இடைப்பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று மயங்கி விழுந்த பிரமோத் தெராயிலை அவரது நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. அவர் உயிரிழந்த நேற்றைய தினம் தான் பிரமோத் தெராயிலின் திருமண தினம் என்பது அவரை பிரிந்து தவிக்கும் நண்பர்களின் சோகத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. 

அவரது உடலை கேரளாவுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளில் பிரமோத் தெராயிலின் நண்பர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Share it:

Post A Comment:

0 comments: