அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருவதோடு எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயற்பட்டு வரும் தூய்மைக்கான நாளை அமைப்பின் ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம், போலி ஆவணங்களை சமர்பித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பௌத்த விவகாரம் மற்றும் புனர்ஜீவன மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதாக கூறி 4.73 மில்லியன் ரூபா பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி தனக்காக இருப்பிடம் ஒன்றை நிர்மாணித்து கொண்டதாகவும் இதன் மூலம் ரத்ன தேரர் அரச பணத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தெளிவான சாட்சியங்கள் இருப்பதால் விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகமே இந்த ஆலோசனையை அண்மையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர். ரணவீரவிற்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள யோசனைகளை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றாது போனால், மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Post A Comment:
0 comments: