ஷரீஆவின் பின்ணணியில் ஓரு பார்வை
ஷேக் முஹம்மத் பகீஹுத்தீன் அவர்கள் குவைத்தில் ஆற்றிய உரை
2015 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எதிரணியின் பொதுவேட்பாளர் தெரிவு, அரசியல் கட்சிகளின் அதிரடித் தாவல்கள், தேர்தல் பிரசாரத்தை வரலாறு காணாத போரட்ட களமாக மாற்றியுள்ளது. கொந்தளிப்பு மிக்க அரசியல் சூழ் நிலையில் குடிமக்களின் வாக்குரிமை தொடர்பான இஸ்லாமிய பார்வை குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
• ஷரீஆவின் பார்வையில் வாக்குரிமை ஒரு கடமை
• தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்
• வாக்குரிமையை பயன்படுத்துவதில் பெண்களும் சம பொறுப்புள்ளவர்களே
• வாக்குரிமையை பயன்படுத்துவது காலத்தின் கட்டாயத் தேவை
ஷரீஆவின் பார்வையில் வாக்குரிமை
வாக்களிப்பது என்பது சாட்சி பகர்தல் என்று அர்த்தம். அனைத்து வகையான தேர்தல்களிலும் வேட்பார்களுக்கு வாக்களிப்பது என்பது குறித்த அபேட்சகர் தகைமை, நேர்மை, நம்பிக்கை ரீதியில் சமூகத்தின் பிரதிநிதியாக அல்லது நாட்டின் தலைவராக வருவதற்கு தகுதியானவர் என வாக்காளர் வழங்கும் சாட்சியாகும். தேசத்தினதும் பொதுமக்களினதும் நலன்கள் தேர்தல்களில் தங்கியிருப்பதால் வாக்குரிமையுள்ள சகலரும் தகுதியான வேட்பாளருக்கு சாட்சி பகர்வது அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய கடமை என்றே இஸ்லாமிய சட்டவல்லுனர்கள் குறிப்பிடுவர். அதாவது வாக்களிப்பது அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் கடமையாகும்.
அல்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இடம் பெற்றுள்ள சாட்சி பகர்தல் என்ற வார்த்தை வாக்களித்தல் என்பதற்கு சமனானது என்ற கருத்தில் சட்டத்துறை மற்றும் அரசியல் துறை அறிஞர்கள் மத்தியில் கருத்தொற்றுமை நிலவுகிறது.
தேர்தல் காலங்களில் வாக்காளர் அட்டை விநியோகம் என்பது சாட்சி பகர்வதற்கான அழைப்பாகும். 'சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அழைப்பு விடுக்கப்பட்டால் மறுக்கக் கூடாது' (பகரா:282) என அல்குர்ஆன் பணிக்கிறது. அவ்வாறே வாக்குரிமையை பகிஷ்கரிப்பது, மறைப்பது குற்றம் என்ற கருத்தை அல்குர்ஆன் வலியுறுத்துகிறது. 'சாட்சியத்தை நீங்கள் மறைக்கவும் வேண்டாம். எவரேனும் அதனை மறைத்தல் நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவத்திற்குள்ளாகி விடுகின்றது' என அல்லாஹ் கூறுகிறான். (பகரா:283)
வாக்கு என்பதற்கு பிரதிநிதியாக குரல் கொடுப்பவரை நியமத்தல் என்றும் சிலர் பொருள் கொடுப்பர். அதாவது வாக்காளர் தன் சார்பாக குரல் கொடுப்பதற்கும், உரிமைகளை பாதுகாப்பதற்கும் தேச நலன்களையும், மக்கள் நலன்களையும் அவதானிப்பதற்கு ஒரு முகவரை அல்லது பிரதிநிதியை தெரிவு செய்கிறார் என்பது பொருள். கலாநிதி முஸ்தபா ஸிபாஈ, முஹம்மத் பல்தாஜீ போன்றோர் இக்கருத்தை கொண்டுள்ளனர். இதுவும் வாக்குரிமை குறித்த சட்டபூர்வமான ஒரு பார்வைதான் என அறிஞர் பத்ஹி அபுல் வர்த் கூறியுள்ளார்கள்.
தேர்தல்களின் போது தகுதியான, மிதவாத சிந்தனைப் போக்கு கொண்ட ஒருவருக்கு ஆதரவாக வாக்குரிமையை பயன்படுத்துவது கட்டாயக் கடமை எனவும் நியாயமான காரணமின்றி வாக்களிக்காமல் ஒதுங்குவது குற்றம் எனவும் பேரறிஞர் முஹம்மத் அஹ்மத் ராஷித் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இலங்கை போன்ற பௌத்த நாடுகளில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இந்த பத்வா செல்லுபடியாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதே கருத்தை இஸலமிய அறிஞர்களான அப்துல் கரீம் ஸைதான், அப்துல் ரகுமான் அல்பர், யூஸுப் கர்ளாவி போன்ற பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் பங்கு கொள்வதற்கான ஷரீஆ ஆதாரங்கள்
சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் தாம் வாழும் தேசத்தின் நலன்களை நிறைவேற்றிக் கௌ;வதற்கும், தீமைகளை தவிர்ப்பதற்கும் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துவது கடமை என அறிஞர் அப்துல் கரீம் ஸைதான் அவர்கள் குறிப்பிடுகிறார்.
காபிரான அரசிடமிருந்து நலன்தரும் பகுதிவாரியான பயனை பெறுவது ஆகும் என்ற அடிப்படையில் அதற்கு அவர் ஆதராரம் காட்டுகிறார்.
இவ்வாதாரத்தை அவர் விளக்கும் போது, நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் குறைஷிக் காபிர்களின் தலைவர்களிடமிருந்து உயிர்ப் பாதுகாப்பு பெற்ற பல சம்பவங்கள் ஸீராவில் உள்ளன. அதன் பொருள் செல்வாக்குள்ள, உயர் அந்துஸ்துள்ள குறைஷி காபிர் ஒருவர், இன்னாருக்கு நான் பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அறிவித்தால் அவருடை சமூகம் அந்த பாதுகாப்பு வழங்கப்பட்டவருக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதாகும். காரணம் அந்த அறிவிப்பு ஒரு உடன்படிக்கை. எனவே அவரது கோத்திரத்தில் யாராவது பாதுகாப்பு கொடுக்கப்பட்டவருக்கு தீங்கு செய்தால் அது அத்துமீறியதாகவுமும் உடன்படிக்கையை முறித்ததாகவுமே கருதப்பட்டது.
நபிகளார் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திலிருந்து மக்காவிற்கு திரும்பியபோது அபூபக்கர் (ரழி) அவாகள் போன்ற பல தோழர்கள் மக்காவில் இருக்கும் போது முஷ்ரிகான முதுஇம் பின் அதியின் பாதுகாப்புடனேயே தாயகம் திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகான தன் நண்பர் அப்துல்லா பின் அரீகத் என்பவரை தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டு முத்இம் பின் அதியிடம் தூதனுப்பினார்கள். அதற்கு முத்இம் சம்மதம் தெரிவித்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் முதுஇமின் இல்லத்தில் அன்றை இரவை கழித்து விட்டு அடுத்த நாள் காலையில் அவரும் இன்னும் அவரது ஆறு அல்லது ஏழு பிள்ளைகளுமாக உருவப்பட்ட வால்களுடன் கஃபாவிற்குள் நுளைந்தார்கள். அப்போது குறைஷிக் தலைவன் அபூ ஸுப்யான் எதிரிலே வந்து நீர் முஹம்மதை பின் தொடர்ந்து வந்தவரா அல்லது அவருக்கு பாதுகாப்பு கொடுத்து வருகின்றவரா எனக் கேட்டான். நான் முஹம்மதுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளேன் என முதுஇம் பதில் கொடுத்தார். அப்படியாயின் உனது பொறுப்பில் உள்ள உடன்படிக்கையை நீர் முறிக்கத் தேவையில்லை எனக் கூறி அந்த பாதுகாப்பை அபூ ஸுப்யானும் அங்கீகரித்தார். இதுபோன்ற ஏராளமான நம்பகமான நிகழ்வுகள் ஸீராவில் அதிகமாகவே காணமுடியும்.
இவை சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான வழிகாட்டல்களாகும். அநீதி நிலவும் அரசாங்கத்தில் தேர்தில் என்பது சத்தயத்தை உரைப்பதற்கான ஒரு வழிமுறையாகும். சர்வதிகாரிகளின் கொடுமையை எதிர்ப்பதற்கான சாத்வீகமான போரட்ட ஒழுங்கும் அதுவே. எனவே தான் இறைதூதர் தேச, மக்கள் நலன்கள் கருதி ஒரு காபிரின் பாதுகாப்பை வேண்டினார்கள். ஒப்பிட்டு நோக்கும் போது இது தேர்தலில் பங்கு பற்றுவதற்கான தெளிவான ஆதராமாகும்
இங்கு வாக்குரிமை என்பது நிராகரிப்புக்கு விசுவாசம் தெரிவிப்பது அன்று. முஸ்லிம்களின் நலனுக்கான விருப்ப வாக்கை கொடுப்பதாகும். இதற்கு பல சம்பவங்கள் சான்றாக உள்ளன. உதாரணமாக மக்கா காலப் பிரவில் பாரசீகத்துக் எதிராக ரோம் வெற்றி பெற்றபோது முஸ்லிம்கள் மகிழ்ந்தார்கள். காரணம் ரோமர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்கள். நெருப்பு வணங்கியை விட அல்லாஹ்வின் வேதம் அருளப்பட்டவர்கள் மேல் என்பதே அந்த மகிழ்ச்சிக்கு காரணம். ஹபஷாவில் நஜ்ஜாசியின் வெற்றிக்காக நபித் தோழர்கள் சந்தோசமடைந்தார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஜாஹிலிய்யா காலத்தில் அப்துல்லா பின் ஜத்ஆனின் விட்டில் தீமைக் கெதிரான கூட்டணியில் ஒன்று கூடியதை நினைவு கூர்ந்து, அது போன்ற ஒரு சமூக செயற்பாட்டிற்காக இன்று அழைக்கப்பட்டாலும் நான் நிச்சயமாக பதில் அளிப்பேன் என கூறினார்கள். இவை உலக விவகாரங்களில் நபிகளார் (ஸல்) அவர்கள் தேச மற்றும் மக்கள் நலனகள் கருதி பற்றோடும் விசுவாசத்தோடம் அடுத்த தரப்பினரோடு சேர்ந்து செயற்பட்டுள்ளாகள் என்பதை காட்டுகின்றன.
தேர்தல் ழுழுக்க முழுக்க ஊழல், மோசடி நிறைந்த நிலையில் அமையும் என்றிருந்தாலும் வாக்குரிமைய பயன்படுத்துவது கடமை என்றே கலாநிதி ஸலாஹ் ஸுல்தான் விளக்கியுள்ளார்கள். காரணம் அநியாயம் குறித்து ஸுன்னாவின் வழிகாட்டல் அப்படித்தான் அமைந்துள்ளது. ' உனது கடமையை நிறைவேற்று, உனது உரிமையை அல்லாஹ்விடம் கேள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம் ) எனவே எமது பொறுப்பில் உள்ள வாக்குப் பலத்தை பிரயோகித்து அநியாயத்திற்கு இல்லை என்றும் மிதவாதிக்கு ஆம் என்றும் சாட்சி சொல்வது இறைவிசுவாசியின் கடமையாகும்.
மாற்றத்திற்கான சாத்வீக போராட்டத்தின் ஒரு ஆயுதமே வாக்குரிமை. மோசடி என்ற காரணம் காட்டி அந்தக் கடமையை பாழ்படுத்தக் கூடாது. தீமையை தடுப்பதற்கு அடுத்த தரப்பின் ஒப்புதல் தேவையில்லை. கடமை செய்தால் அல்லாஹ்விடம் கூலி கிடைக்கும். வாக்குரிமையை விட்டுக் கொடுப்பது என்பது மோசடிக்கு நாம் உடந்தையாக இருக்கிறோம் என்பதே அர்த்தம். சாட்சி சொல்லாம் மௌனிப்பது நடக்கின்ற அநீதிகளை அங்கீகரிப்பது என்று பொருள் அல்லது சரியோ பிழையோ நீ விரும்பியதை செய்வதற்கு நான் பூரண ஆதரவு என்று கூறுவதாக அர்த்தம்.
மேற்குரிய அனைத்து சான்றுகளும் பெண்களுக்கும் சேர்த்தே ஷரிஆ கடமையாக்கியுள்ளது. ஆண்களைப்போன்றே பெண்களும் சமபொறுப்புள்ளவர்களே. சட்டரீதியான நியாயமான காரணம் இன்றி பெண்கள் வாக்குரிமையை பயன்படுத்தாமல் விடுவது குற்றம் என்ற ஷரீஆவின் பார்வை பெண்களுக்கும் சேர்த்தே கூறப்பட்டுள்ளது. எனவே ஆண்கள் இது குறித்து மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். அதற்கான வாய்பையும் வசதிகளையும் தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவேண்டும்.
வாக்குரிமையை பயன்படுத்துவது எப்படி ஷரீஆவின் பார்வையி;ல் கடமையோ அவ்வாறே அது காலத்தின் கட்டாயத் தேவையுமாகும். நாட்டில் அரசியல் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. சியோனிச சக்திகள் கையோங்கி வருதை காண முடிகிறது. அமரிக்க-இஸ்ரேல் மற்றும் சீனா, மேற்கு நாடுகளின் ஆடுகளமாக இலங்கை மாறியுள்ள நிலையில் முகம் போன போக்கில் வாழமுடியாது. எதுவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று ஒரு முஸ்லிம் வாழ முடியாது. தொழுகை தீமையை தடுக்கும் என்று அல்குர்ஆன் கூறுகிறது. வாக்குரிமை தீமை தடுப்பதற்கான பலமான கை. இது பெறும் பாக்கியத்தை கொண்டு வரும் அரசியல் பெறுமானம். இந்த சந்தர்பத்தை நழுவ விட்டால் இம்மையிலும் மறுமையிலும் கைசேதம்தான் மிஞ்சும்.
இன்று நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு மதச்சண்டைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. ஊடக சுதந்திரம் மறுக்கப்படும் காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம். எனவே தேசத்தை பாதுகாப்புது ஒவ்வொரு குடிமகனினதும் கடமையாகும். நலன்களை முற்படுத்தி தீமைகளை தவிர்ப்பதற்கோ அல்லது அழிவுகளை, சேதங்களை குறைப்பதற்கோ தேர்தல் ஒரு சிறந்த ஆயுதம். அந்த வாக்குரிமையை கச்சிதமாக பயன்படுத்தவது ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் முன்னால் உள்ள சமனான பொறுப்பாகும். எனவே எதிர்காலங்களில் வரும் தேர்தல்களில் காலத்தின் தேவையறிந்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.


.jpg)
Post A Comment:
0 comments: